மராட்டிய மாநிலத்தில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி, 30 பேர் மாயம்


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 23 July 2021 9:50 AM GMT (Updated: 23 July 2021 10:12 AM GMT)

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை

மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மராட்டிய மாநிலத்தின்  கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்ஸில் மற்றும் அதைச் சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில், கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பலத்த மழை காரணமாக  சாலைகள் நீரில் மூழ்கின.

இதை தொடர்ந்து மீட்பு பணிக்காக இரண்டு கடற்படை மீட்புக் குழுக்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்துக்கும், ஐந்து குழுக்கள் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லூனுக்கும் சென்றுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்)மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உதவி  வருகிறது.

 ராய்காட் மாவட்டம் மகாத் தெஹ்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பகுதியில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன.மொத்தம் 32 உடல்கள் ஒரு இடத்திலிருந்தும், நான்கு உடல்கள் மற்ற இடங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன. 30 க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் மாயமாகி உள்ளதாக  சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுத் மையம் இன்று அறிவித்துள்ளது. 

Next Story