மானநஷ்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை கோர்ட்டு உத்தரவு


மானநஷ்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 July 2021 7:37 PM GMT (Updated: 27 July 2021 7:37 PM GMT)

மானநஷ்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த விசாரணையில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது.

மானநஷ்ட வழக்கு
இந்தி பாடலாசிரியா் ஜாவித் அக்தர் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை கங்கனா ரணாவத் அவதூறு கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை கங்கனா ரணாவத் மீது அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இதுவரை நடிகை கங்கனா ரணாவத் நேரடியாக ஆஜராகவில்லை.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கங்கனா, வழக்கில் விசாரணையில் நேரடியாக ஆஜராக நிரந்தரமாக விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஜாவித் அக்தர் கங்கனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

கடைசியாக ஒருமுறை
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கங்கனா ரணாவத்திற்கு விசாரணைக்கு ஆஜராக நிரந்தரமாக விலக்கு அளிக்கவில்லை. அதே நேரத்தில் கடைசியாக ஒருமுறை நேற்று மட்டும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறினார். மேலும் அடுத்து விசாரணை நடைபெறும் நாளில் கங்கனா ரணாவத் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் நடிகைக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற ஜாவித் அக்தரின் மனுவையும் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். அடுத்த முறையும் நடிகை ஆஜராக தவறினால், அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்யுமாறு ஜாவித் அக்தர் தரப்பிடம் கூறினார். மேலும் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story