உத்தரபிரதேசத்தில் வீட்டு முன் விளையாடிய சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை


உத்தரபிரதேசத்தில் வீட்டு முன் விளையாடிய சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை
x
தினத்தந்தி 3 Aug 2021 2:27 AM GMT (Updated: 3 Aug 2021 2:27 AM GMT)

உத்தரபிரதேச மாநிலம் பாராய்ச் மாவட்டத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனப்பகுதியை ஒட்டி கலந்தர்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, அன்ஷிகா என்ற 6 வயது சிறுமி தனது மாமாவுடன் தன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பாய்ந்துவந்த ஒரு சிறுத்தை, சிறுமியைத் தாக்கி கவ்வி இழுத்துச் சென்றது. கிராமத்தினர் அதை தடுக்கும்முன் காட்டுக்குள் போய் மறைந்துவிட்டது. கிராமத்தினரும், வனத்துறையினரும் காட்டுக்குள் நடத்திய தேடுதலில் அதிகாலை 2 மணியளவில் சிறுமியின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. மீதமுள்ள உடலைக் காணவில்லை. 

இந்தச் சம்பவத்துக்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அருகே மற்றொரு 7 வயது குழந்தையையும் சிறுத்தை தாக்கிக் கொன்றது. இப்படி அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் கிராமத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. டிரோன் உதவியுடன் சிறுத்தையை தேடிப் பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது. மயக்கமருந்து ஊசி செலுத்தும் குழுவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் வீடுகளை விட்டு வௌியே வர வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று கிராம மக்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களில் 6-க்கு மேற்பட்டோர் சிறுத்தையால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story