தெலங்கானாவில் ட்ரோன் மூலம் மருந்து பொருட்களை அனுப்பும் திட்டம் தொடக்கம்


தெலங்கானாவில் ட்ரோன் மூலம் மருந்து பொருட்களை அனுப்பும் திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 12 Sep 2021 6:09 AM GMT (Updated: 12 Sep 2021 6:09 AM GMT)

தெலங்கானாவில் ட்ரோன்கள் மூலமாக மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

ஐதராபாத்,

தெலங்கானாவில் அவசரகால மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கும், மலை பகுதிகள், கிராமங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து  மருந்து பொருட்களை ட்ரோன் மூலம் அனுப்பி வைக்கும் வானிலிருந்து மருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை உலக பொருளாதார மன்றம், நிதி அயோக், அப்பல்லோ மருத்துவமனையின் ஹெல்த்நெட் குளோபல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தெலங்கானா அரசு செயல்படுத்தியுள்ளது. ட்ரோன் மூலமாக மருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விகாராபாத் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். 

முதற்கட்டமாக தடுப்பூசிகள் நிரப்பப்பட்ட 5 கிலோ எடை கொண்ட பெட்டியை தூக்கிய வண்ணம் பறக்க தொடங்கிய ட்ரோன், 10 நிமிடங்கள் பயணித்து 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்தது. அப்போது பேசிய தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ், போக்குவரத்து நெரிசல் இடையூறு இல்லாமல் தடுப்பூசிகள், ரத்தம், அவசர மருத்துவ பொருட்களை ட்ரோன் மூலம் எளிதாக அனுப்பி வைக்கலாம் என்றார். மேலும் தெலுங்கானாவில் படிப்படியாக இத்திட்டம் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

Next Story