அமரிந்தர் சிங் காங்கிரசை காயப்படுத்த மாட்டார்; கெலாட் நம்பிக்கை


அமரிந்தர் சிங்  காங்கிரசை காயப்படுத்த மாட்டார்; கெலாட் நம்பிக்கை
x

கேப்டன் அமரிந்தர் சிங் கட்சியின் மரியாதைக்குரிய தலைவர் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஜெய்பூர், 

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் நவ்ஜோத்சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இது அமரிந்தர் சிங்குக்கு வேப்பங்காயாக கசந்தது. இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது. இந்த நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து அமரிந்தர் சிங் நேற்று பதவி விலகினார். 

 இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல் மந்திரி யார்? என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. சித்துவையோ, அவரது ஆதரவாளர்களையோ முதல் மந்திரியாக நியமித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அமரிந்தர் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், சித்து தரப்பினரை முதல் மந்திரியாக முன்மொழிந்தால், அமரிந்தர் சிங் போர்க்கொடி தூக்குவார் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலோட், அமரிந்தர் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது; -கேப்டன் அமரிந்தர்  சிங் கட்சியின் மரியாதைக்குரிய தலைவர். காங்கிரஸின் நலன்களை மனதில் கொண்டு தொடர்ந்து அவர் கட்சியில் பணியாற்றுவார். காங்கிரஸை காயப்படுத்த மாட்டார் என்று நம்பிகிறேன்” எனத்தெரிவித்துள்ளார். 

Next Story