தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் டி.என்.பி.எஸ்.சி. மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு


தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் டி.என்.பி.எஸ்.சி. மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு
x
தினத்தந்தி 1 Oct 2021 11:42 PM GMT (Updated: 1 Oct 2021 11:42 PM GMT)

தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயர் பணி நியமனம் பெற்றவர்களுக்கான பதவி உயர்வை டி.என்.பி.எஸ்.சி. மதிப்பெண் அடிப்படையிலேயே வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை 12 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனை) சட்டம் 2016-ல் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும் என்ற சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக்கோரியும், போட்டித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி தயாரித்து பதவி உயர்வு வழங்க உத்தரவிடக்கோரியும் பொதுப்பணித்துறை என்ஜினீயரான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த செந்தூர் உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை கணக்கிட வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் 2016-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் சீனியாரிட்டியை கணக்கிட்டு அதன் அடிப்படையில் 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய தமிழக அரசு, டி.என்.பி.எஸ்.சி.யின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

அதேவேளையில் சுப்ரீம் கோர்ட்டு, 8 வாரத்தில் தனது தீர்ப்பை அமல்படுத்த தவறிய தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க தலைமைச் செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் தீர்ப்பை இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என வாதிட்டனர்.

அதையடுத்து, தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்த 4 வார கால கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை 4 வாரத்தில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று கூறிய தீர்ப்பு வருமாறு:-

தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயர் பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. 1999, செப்டம்பர் 10-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே பதவி உயர்வை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை 12 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.

2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றிய அரசு உயர் அதிகாரிகளான தலைமைச் செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவமதித்து குற்றம் இழைத்துள்ளனர். இதற்கான தண்டனையின் அளவு, அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி அறிவிக்கப்படும். அன்றைய தேதியில் அனைவரும் ஆஜராக வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story