மராட்டியத்தில் தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை வௌியீடு


மராட்டியத்தில் தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை வௌியீடு
x
தினத்தந்தி 13 Oct 2021 12:21 AM GMT (Updated: 13 Oct 2021 12:21 AM GMT)

மராட்டியத்தில் தியேட்டர்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வணிக வளாகங்கள், மைதானங்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல வருகிற 22-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தநிலையில் நேற்று தியேட்டர்களை திறக்க மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் சமூக இடைவெளியை உறுதி செய்ய தியேட்டர், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தியேட்டர் வளாகத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் சரியான இடைவெளி விட வேண்டும். கேண்டீன்களில் பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படலாம். வெளியில் இருந்து உணவுப்பொருள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாது. பார்வையாளர்கள் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். தியேட்டர் வளாகத்தில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும். தியேட்டர் வளாகத்தில் யாரும் எச்சில் துப்பக்கூடாது. பார்வையாளர்களை உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்க வேண்டும்.

இதேபோல பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், அல்லது ஆரோக்கியசேது செயலியில் அவர் பாதுகாப்பாக உள்ளார் என குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். தியேட்டரில் குளிர்சாதன வசதி 24 முதல் 30 டிகிரி வரை இருக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story