கே-ரெயில் திட்டம் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும் - பினராயி விஜயன்


கே-ரெயில் திட்டம் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும் - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 13 Oct 2021 10:33 PM GMT (Updated: 13 Oct 2021 10:33 PM GMT)

திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே அதிவேக ரெயில் தட திட்டம் கேரளாவில் உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே அதிவேக ரெயில் தடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரெயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து சட்டமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என நேற்று எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் முதல் -மந்திரி பினராயி விஜயன் பேசினார்.

இந்த திட்டம் பயண நேரத்தை வெகுவாக குறைக்க உதவும். திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே பயணம் செய்ய ஆகும் நேரம் கிட்டத்தட்ட 16 மணி நேரமாக உள்ளது.ஆனால், இந்த அதிவேக ரெயில் திட்டம் மூலம், திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு  4 மணி நேரத்தில் சென்றடையலாம் என்று தெரிவித்தார்.மேலும், இந்த திட்டம் மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும் என்று கூறினார்.

இந்த திட்டத்தின் செலவு சுமார் 63,941 கோடி ரூபாய். ரயில்வேயில் இருந்து ரூ.2,150 கோடி பெறப்படும், அதே நேரத்தில் மாநில அரசு ரூ.3,253 கோடியை ஏற்கும். பொது மக்களுக்கு பங்குகளை வழங்குவதில் இருந்து ரூ. 4,252 கோடி திரட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு 1,383 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.மத்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரெயில்வே வாரியத்திடம் இருந்து இந்த திட்டத்துக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரியின் இந்த விளக்கத்துக்கு பின் எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Next Story