முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்


முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்
x
தினத்தந்தி 26 Nov 2021 12:24 PM GMT (Updated: 26 Nov 2021 12:24 PM GMT)

முல்லை பெரியாறு அணை பகுதியில் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

முல்லை பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக 15 மரங்களை வெட்ட கேரளாவிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதற்கு 15 மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி அளித்து கேரளா தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினும் நன்றி தெரிவித்து கேரள முதல் மந்திரி  பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தங்களை கேட்காமலேயே வனத்துறை அதிகாரிகள் தமிழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறியிருந்தார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து தமிழகத்துக்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்வதாக கேரள அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில், முல்லை பெரியாறு அணை பகுதியில்  15 மரங்களை வெட்டுவதற்கு  அனுமதிக்க  கேரள அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்துச்செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். வல்லக்காடு - முல்லை பெரியார் காட்டு சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது. 


Next Story