ஓமிக்ரான் பாதிப்பின் அறிகுறிகள்: சோர்வு, லேசான காய்ச்சல் -தொண்டை அரிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Nov 2021 1:12 PM GMT (Updated: 29 Nov 2021 1:12 PM GMT)

இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது.

புதுடெல்லி,

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு ஏற்கெனவே பரவி விட்டது.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதியாகும் முன்னரே, அவை பல்வேறு நாடுகளுக்குப் பரவியிருப்பதை இது காட்டுகிறது.

எல்லைகள் மூடல், விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு, விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடும் மருத்துவப் பரிசோதனை, முழுவீச்சில் தடுப்பூசி இயக்கம், இயல்புக்கு திரும்பிய பொதுவெளிக் கட்டுப்பாடுகள் மீது மறுபரிசீலனை என நாடுகள், தங்கள் தேவைக்கேற்ப ஒமிக்ரான் தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள், முந்தைய ரகங்களை விட வேகமான பரவல், தற்போதைய தடுப்பூசிக்கு அடங்காதது என வெளியாகி வரும் பல தகவல்கள், ஒமிக்ரான் மீதான கவலையை அதிகரித்துள்ளன.

தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி,   ஒமிக்ரான்  வைரஸ் புதிய அறிகுறிகளை உருவாக்குகிறது என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:- 

ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பின் சில அறிகுறிகளில் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அடங்கும். 

இதனால்  பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு சில நாட்களுக்குள் குணமடைந்து விடுவர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை.  கடுமையான நோய் வராது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் இப்போதைக்கு, தடுப்பூசி போடாத நோயாளிகளுக்கு கூட லேசான அறிகுறிகள் உள்ளன.  என்று அவர் கூறினார்.

Next Story