இந்தியா: நேற்று 2.47 லட்சம், இன்று 2.64 லட்சம் - உச்சமடையும் தினசரி கொரோனா பாதிப்பு...!


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 14 Jan 2022 4:05 AM GMT (Updated: 14 Jan 2022 4:05 AM GMT)

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 மற்றும் நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 47 ஆயிரத்து 417-ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சத்து 82 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 345 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 24 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 155 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 819 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story