குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு


குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு
x

குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆமதாபாத்,

குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

182 உறுப்பினர் குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பிராந்தியங்களில் அடங்கியுள்ள இந்த தொகுதிகளில் 63.31 சதவீத வாக்குகள் பதிவானது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து மீதமுள்ள 93 தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் மத்திய குஜராத் பிராந்தியங்களுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன.

இந்த தொகுதிகளில் சுமார் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலம் நாளை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த தொகுதிகளில் கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. குறிப்பாக ஆளும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

இதைப்போல காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களும் கடந்த சில வாரங்களாக இந்த தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இவ்வாறு அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வடைந்தது.

இதற்கிடையே இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.


Next Story