சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போட 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு


சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போட 3 குழுக்களை அமைத்தது மத்திய அரசு
x

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

சமூக ஊடகங்களுக்கு கடிவாளம்

நமது நாட்டில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்கு கடிவாளம் போடத்தக்க வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கடந்த அக்டோபர் மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. இந்த விதிகள், 3 பேர் கொண்ட குறைகள், மேல்முறையீட்டு குழுக்களை மத்திய அரசு அமைக்க வழிவகுத்தது.

சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணைய அடிப்படையிலான தளங்களுக்கு எதிரான பயன்பாட்டாளர்களின் புகார்களை இந்த குறைகள், மேல்முறையீட்டு குழுக்கள் கவனித்து, நடவடிக்கை எடுக்கும். இந்த குழுக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கமிட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு தலைவரையும், வெவ்வேறு அரசு நிறுவனங்களிலிருந்தும், ஓய்வு பெற்ற அதிகாரிகளில் இருந்தும் 2 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

3 குழு விவரம்

முதல் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி தலைவராக இருப்பார். இதன் முழு நேர உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அசுதோஷ் சுக்லா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமை பொது மேலாளரும், முதன்மை தகவல் அதிகாரியுமான சுனில் சோனி இருப்பார்கள்.

இரண்டாவது குழுவுக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கொள்கை மற்றும் நிர்வாக பிரிவின் இணைச்செயலாளர் இருப்பார். இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி சுனில் குமார் குப்தா, 'எல் அண்ட் டி இன்போடெக்' நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் கவிந்திர சர்மா இருப்பார்கள்.

மூன்றாவது குழுவுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி கவிதா பாட்டியா தலைவராக இருப்பார். இந்திய ரெயில்வேயின் முன்னாள் போக்குவரத்து பணிகள் அதிகாரி சஞ்சய் கோயல், ஐ.டி.பி.ஐ. இன்டெக் கிருஷ்ணகிரி முன்னாள் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான ரகோத்தமராவ் இருப்பார்கள்.

மந்திரி எச்சரிக்கை

இந்த தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சந்திரசேகர் ஏற்கனவே கூறும்போது, "தொழில்நுட்ப விதிகள் பின்பற்றப்படாவிட்டால், இந்த சமூக ஊடக தளங்கள் அனுபவிக்கும் பாதுகாப்புக்கு பிரச்சினை வரும்" என்று எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.


Next Story