அரியானாவில் இன்று தொடங்குகிறது மாநில உள்துறை மந்திரிகள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு


அரியானாவில் இன்று தொடங்குகிறது மாநில உள்துறை மந்திரிகள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு
x
தினத்தந்தி 27 Oct 2022 2:07 AM GMT (Updated: 27 Oct 2022 2:25 AM GMT)

சிந்தனை அமர்வு மாநாட்டில், நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசுகிறார்.

புதுடெல்லி,

அரியானாவில் மாநில உள்துறை மந்திரிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசுகிறார்.

அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநில உள்துறை மந்திரிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. சிந்தனை அமர்வு என்ற பெயரில் இம்மாநாடு நடக்கிறது.

இதில், மாநில உள்துறை செயலாளர்கள் மற்றும் மத்திய போலீஸ் படைகள், மத்திய போலீஸ் அமைப்புகள் ஆகியவற்றின் தலைமை இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில், நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசுகிறார்.

5 உறுதிமொழிகள்

பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையில், ஒவ்வொருவரும் 5 உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ள வலியுறுத்தினார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடுவேன், அடிமைத்தன அடையாளங்கள் அனைத்தையும் அழிப்பேன், இந்தியாவின் மரபுகளில் பெருமை கொள்வேன், ஒற்றுமையை கடைபிடிப்பேன், எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்பதுதான் அந்த உறுதிமொழிகள்.

இந்த உறுதிமொழிகளுக்கு ஏற்ப உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் கொள்கை வகுப்பது பற்றி மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

போலீஸ்படை நவீனமயம்

போலீஸ்படைகளை நவீனப்படுத்துதல், இணைய குற்றங்கள், குற்றவியல் நீதிமுறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், நில எல்லை நிர்வாகம், கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

ஒத்துழைப்பான கூட்டாட்சி என்ற உணர்வில் மாநாடு நடத்தப்படுகிறது. இதனால், மத்திய-மாநில அரசுகள் மட்டத்தில் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் மேலும் இணக்கம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story