குக்கரால் தாக்கி காதலி படுகொலை கேரள வாலிபர் கைது


குக்கரால் தாக்கி காதலி படுகொலை கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:45 PM GMT)

பேகூரில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நிலையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து காதலியை குக்கரால் தாக்கி கொலை செய்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு-

பேகூரில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நிலையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து காதலியை குக்கரால் தாக்கி கொலை செய்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காதல் ஜோடிகள்

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 24). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கேரளாவை சேர்ந்த இளம்பெண் தேவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பெங்களூரு பேகூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்தபடி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்தநிலையில் வைஷ்ணவிற்கு தேவாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதாவது தேவாவுக்கு வேறு நபர்களுடன் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த வைஷ்ணவ் அடிக்கடி தேவாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இதுதொடர்பாக வைஷ்ணவ் மற்றும் தேவா இடையே தகராறு ஏற்பட்டது.

குக்கரால் தாக்கி கொலை

இந்த தகராறு முற்றியதில் கோபமடைந்த வைஷ்னவ் வீட்டில் இருந்த குக்கரை எடுத்து தேவாவை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தேவா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து மைகோ லே-அவுட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து காதலி தேவாவை, வைஷ்னவ் அடித்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து வைஷ்ணவை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து வைஷ்ணவ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story