ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு


ம.பி.யில்  ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு
x

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் நாராயண்பூர் கிராமம் உள்ளது. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஒரு ஆழ்துளை கிணறு மூடப்படாமல் திறந்தநிலையில் இருக்கிறது.

நேற்று பிற்பகல் 2 மணி அளவில் இந்த ஆழ்துளை கிணற்றையொட்டி விளையாடிக்கொண்டிருந்த ஒரு 5 வயது சிறுவன், அதனுள் தவறி விழுந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுவனை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளை அவர்கள் முடுக்கிவிட்டனர்.

ஆழ்துளை கிணற்றின் அருகே ஒரு சுரங்கப்பாதை அமைத்து சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த நேரத்தில் லேசாக மழை தூறியது. அதையும் பொருட்படுத்தாமல் மீட்பு குழுவினர் பணியை தீவிரப்படுத்தினர். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

இதையடுத்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வீடியோ கால் மூலம் சிறுவனுடன் உரையாடினார்.


Next Story