டெல்லியில் அடுத்த மாதம் 4-ந் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை


டெல்லியில் அடுத்த மாதம் 4-ந் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 29 July 2023 11:47 PM GMT (Updated: 30 July 2023 6:54 AM GMT)

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் 4-ந் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். இதற்கான அழைப்பிதழை கட்சி மேலிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து கோஷ்டிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் அனுப்பி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தை எவ்வாறு அமைப்பது என்று விவாதிக்கப்பட உள்ளது. எந்தெந்த விஷயங்களை கொண்டு சென்று மக்களிடம் அணுகுவது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை தேர்தல் பொதுக்கூட்டங்களில் அழைத்து பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள மேலும் 5 தொகுதிகளை கேட்பது குறித்தும், பா.ஜ.க.வின் தேர்தல் அணுகுமுறையை எவ்வாறு எதிர்கொள்வது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் என்ன என்பவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்படுவார் என்ற பரபரப்பு அண்மை காலத்தில் நிலவி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த பரபரப்பு ஏதும் இல்லாத போதும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இது தவிர, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமனம் நீண்ட நாட்களாக செய்யப்படாமல் இருந்து வருகிறது. அதாவது அறக்கட்டளை உறுப்பினர் யசோதாவின் மறைவுக்கு பின்னரும், ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் பா.ஜ.க.வில் இணைந்த பின்னும் அவர்களின் உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. செயல் தலைவர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு பின்னர் அந்த பதவிக்கும் போட்டா போட்டி உருவாகி வருகிறது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களாக தற்போது 4 பேர் உள்ளனர். இந்த பதவிக்கும் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இவை அனைத்தையும் விட முக்கியமாக மாவட்டம் வாரியாக உள்ள காங்கிரஸ் சொத்துகளை பாதுகாப்பது, மீட்பது குறித்த கணக்கு வழக்குகளும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.


Next Story