மத்தியப் பிரதேசத்தில் லாரியில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை


மத்தியப் பிரதேசத்தில் லாரியில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை
x

மத்தியப் பிரதேசத்தில் லாரியை கடத்திச் சென்று லாரியில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள செல்போன்களை 4 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.

சாகர்,

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் அரியானா நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரியில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள செல்போன்களை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை குற்றம் நடந்த இடத்திலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள இந்தூர் அருகே மற்றொரு லாரியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைப்பற்றினர். ஆனால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சாகர் காவல் கண்காணிப்பாளர் தருண் நாயக் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு ரூ.12 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொண்ட கண்டெய்னர் லாரி தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து குருகிராம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தேசிய நெடுஞ்சாலை 44-ல் மகராஜ்பூர் கிராமத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நான்கு கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.

கொள்ளையடித்த செல்போன்களை வேறு லாரிக்கு மாற்றியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தியபோது லாரியை விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், சாகர் மாவட்டத்தில் உள்ள கூர்ஜமர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நான்கு கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லாரி பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.


Next Story