"முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை - அவர்கள் பணக்காரர்களாக இல்லையா?" பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு


முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை - அவர்கள் பணக்காரர்களாக இல்லையா? பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
x

பீகார் பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பிர்பைண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்து தெய்வங்களான லட்சுமி, சரஸ்வதி மற்றும் பஜ்ரங் பாலி குறித்து பாஸ்வான் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். லட்சுமி தேவியை வழிபட்டால் மட்டுமே செல்வம் கிடைக்கும் என்றால், முஸ்லிம்களும் கோடீஸ்வரர்களாக இருக்க மாட்டார்களா? என்று பாஸ்வான் கூறினார்.

அவர் பேசியதாவது, "முஸ்லீம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை, ஆனால் அவர்கள் பணக்காரர்கள் ஆக இல்லையா? முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதில்லை. அவர்களில் அறிஞர்கள் இல்லையா? முஸ்லிம்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகமாட்டார்களா? ஆன்மா மற்றும் கடவுள் விஷயம் எல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே" என்று கூறினார்.

மேலும், "நீங்கள் நம்பினால் அது தெய்வம்.., இல்லையென்றால் அது வெறும் கற்சிலை. நாம் தெய்வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது நம்மைப் பொறுத்தது. தர்க்கரீதியான ஒன்றை அடைய, நாம் அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும். நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் முடிந்துவிடும்" என்றும் லாலன் பாஸ்வான் கூறினார்.

பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகல்பூரில் உள்ள ஷெர்மாரி சந்தையில் மக்கள் போராட்டம் நடத்தி பாஜக எம்எல்ஏவின் உருவ பொம்மையை எரித்தனர்.


Next Story