உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்?


உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்?
x

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

மைசூரு தசரா விழா

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுேதாறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது ஆகும். விஜயதசமி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் உள்ளது.

மகிஷாசூரன் என்ற அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்த நாளையே மைசூரு மக்கள் தசராவாக கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டு வரை மைசூரு தசரா மன்னர் குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டு வந்தது.

ஜனாதிபதி முர்மு பங்கேற்கிறார்

அதன்பின்னர் 1972-ம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுேபால் இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இது 413-வது தசரா விழாவாகும். வரலாற்றுசிறப்பு மிக்க தசரா விழாவை இதுவரை கர்நாடகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் தான் தொடங்கிவைப்பது வழக்கமாக இருந்தது.

இந்த ஆண்டு முதல் முறையாக மைசூரு தசரா விழாவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கிவைக்க உள்ளார். 26-ந்தேதி அவர் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, மலர்கள் தூவி தசரா விழாவை தொடங்கிவைக்க இருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதனால் விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5-ந்தேதி தசரா ஊர்வலம்

இந்த விழாவின் சிகர நிகழ்வாக ஜம்புசவாரி ஊர்வலம் எனும் தசரா ஊர்வலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மைசூரு அரண்மனையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பன்னிமரத்திற்கு இளவரசர் யதுவீர் சிறப்பு வழிபாடு நடத்துவார். பின்னர் தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், குதிரைகள் அலங்கரிக்கப்படும்.

பின்னர் மைசூருவின் காவல் தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையிலான தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து செல்லும். இருபுறமும் மற்ற யானைகள் நடைபோடும். பின்னர் குதிரைப்படை, போலீஸ் பேண்டுவாத்தியக் குழுவினர், கலைநிகழ்ச்சி குழுவினர், அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும். இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரை நடக்கிறது.

லட்சக்கணக்கானோர் வருகை

யானைகள் வீருநடை போட்டப்படி கலைக்குழுவினர், அலங்கார ஊர்திகள் மைசூரு ராஜவீதிகளில் அணிவகுத்து செல்லும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை கண்டு ரசிக்க சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கானோர் மைசூருவில் திரள்வார்கள்.

இத்தகைய புகழ்பெற்ற தசரா ஊர்வலத்தை கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக இருப்பவர், தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்தூவி தொடங்கிவைப்பார். இந்த நிலையில் மைசூரு தசரா ஊர்வலத்தை முதன்முறையாக பிரதமர் மோடி தொடங்கிவைக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்?

அதாவது கர்நாடக அரசு மைசூரு தசரா ஊர்வலத்தின் சிறப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கூறியதுடன், அந்த ஊர்வலத்தை தொடங்கிவைக்க வரும்படி பிரதமருக்கு அழைப்புவிடுத்து இருப்பதாகவும், அவர் கலந்துகொள்ள இசைவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தசரா ஊர்வலத்தை தொடங்கிவைக்க வருகை தந்தால், மைசூரு தசரா விழா வரலாற்றில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்ற தசரா விழா இது தான் என்ற பெருமை பெறும். இதனால் தசரா விழா ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளது. ஆனால் தசரா ஊர்வலத்தில் பிரதமர் பங்கேற்பது தொடர்பாக அரசு தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் மைசூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பசவராஜ் பொம்மை

இந்த நிலையில் இந்த முறை நடைபெறும் ஜம்பு சவாரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக வெளியான தகவல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேட்டபோது, 'ஜம்பு சவாரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வது பற்றி இன்னும் உறுதியாகவில்லை. பிரதமர் வருவது உறுதியானால் அதுகுறித்து தகவல் தெரிவிப்பதாக' கூறினார்.


Next Story