ஞானவாபி மசூதியில் பூஜை நடத்த சென்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா போலீசாரால் தடுத்து நிறுத்தம்!
நான் இங்கேயே உட்கார்ந்து கொள்ளப்போகிறேன், பூஜைக்குப் பிறகுதான் உணவு சாப்பிடுவேன் என அவர் கூறினார்.
வாரணாசி,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் பூஜை நடத்தப்போவதாக அறிவித்த ஸ்ரீ வித்யா மடத்தின் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், அங்கிருந்து கொண்டு சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"ஞானவாபி மசூதி வழக்கில் கோர்ட்டின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆனால் கோர்ட்டின் தீர்ப்பு வரும்வரை கடவுள் பசியோடும் தாகத்துடனும் இருப்பாரா?
இந்த விவகாரத்தில், மசூதிக்குள் பிரார்த்தனை செய்ய அனுமதி கோரி, போலீசிடம் நாங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தோம். ஆனால் போலீசாரிடம் இருந்து பதில் வரவில்லை.
நான் இங்கேயே உட்கார்ந்து கொள்ளப்போகிறேன், பூஜைக்குப் பிறகுதான் உணவு சாப்பிடுவேன்" என கூறினார்.
வாரணாசி கோர்ட்டில் நிலுவையில் உள்ள ஞானவாபி மசூதி வழக்கு, ஜூலை 4ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.