நெருங்கும் கோடைகாலம்: மிரட்டும் வெப்ப அலை - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


நெருங்கும் கோடைகாலம்: மிரட்டும் வெப்ப அலை - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2023 8:28 AM GMT (Updated: 28 Feb 2023 9:05 AM GMT)

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகால வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.

புதுடெல்லி,

கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இடங்களில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் பழரசம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு குறித்து தினசரி கண்காணிப்பை, நாளை (மார்ச் 1-ம் தேதி) முதல் அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்கள், வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார மையங்களில் குளிர்சாதனங்கள் முறையாக செயல்பட தங்கு தடையற்ற மின்விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெப்பம் தொடர்பான நோய்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story