55 மணி நேரம் 14 நிமிடங்கள் நடந்தது; மழைக்கால கூட்டத்தொடர் முழுமையாக வெற்றி - சபாநாயகர் காகேரி சொல்கிறார்


55 மணி நேரம் 14 நிமிடங்கள் நடந்தது; மழைக்கால கூட்டத்தொடர் முழுமையாக வெற்றி - சபாநாயகர் காகேரி சொல்கிறார்
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

கர்நாடக மழைக்கால கூட்டத்தொடர் முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாகவும், 55 மணி நேரம் 14 நிமிடங்கள் சபை நடந்துள்ளதாகவும் சபாநாயகர் காகேரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் சபாநாயகா் காகேரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கூட்டத்தொடர் வெற்றி

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் 10 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் முழுமையாக வெற்றி அடைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 10 நாட்களில் 55 மணி நேரம் 14 நிமிடங்கள் சபை நடந்திருந்தது. இந்த கூட்டத்தொடரில் 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குறிப்பாக விதிமுறை 69-ன் படி மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் எழுப்பிய 150 கேள்விகளுக்கு அரசு பதில் அளித்துள்ளது. இதுதவிர 1,650 கேள்விகளுக்கு எழுத்து மூலமாக உறுப்பினர்கள் பதில் அளித்துள்ளனா். வழக்கமாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்பது குறைவாக இருக்கும். மழைக்கால கூட்டத்தொடரில் 99 சதவீத எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று இருந்தார்கள்.

பெலகாவியில் நடத்த நடவடிக்கை

கொரோனா காரணமாக சட்டசபை கூட்டத்தொடரை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மழைக்கால கூட்டத்தொடரை மாணவ, மாணவிகள் உள்பட 15 ஆயிரத்து 614 பேர், சபையில் உள்ள இருக்கையில் அமர்ந்து பார்த்திருந்தார்கள்.

குளிர்கால கூட்டத்தொடரை பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நடத்த வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, அடுத்த கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு காகேரி கூறினார்.


Next Story