ரஷிய போர்: சர்வதேச பாதிப்புகளை குறைப்பது பற்றி ஜெய்சங்கர், பிளிங்கன் ஆலோசனை


ரஷிய போர்: சர்வதேச பாதிப்புகளை குறைப்பது பற்றி ஜெய்சங்கர், பிளிங்கன் ஆலோசனை
x

ரஷியா மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட சர்வதேச பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளை பற்றி ஜெய்சங்கர் மற்றும் பிளிங்கன் ஆலோசனை மேற்கொண்டனர்.



புதுடெல்லி,


டெல்லியில் அனைத்து ஜி-20 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி மற்றும் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஜி-20 வெளியுறவு மந்திரிகளுடனான கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை, அந்தோணி பிளிங்கன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சர்வதேச மற்றும் மண்டல அளவிலான சவால்களை எதிர்கொள்வது பற்றிய பார்வைகளை பகிர்ந்து கொண்டார்.

இரு தலைவர்களும், இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் எப்படி தொழில்நுட்பங்களை விரிவுப்படுத்துவது? பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு மற்றும் உணவு, எரிசக்தி ஆகியவற்றை அதிகரிப்பது மற்றும் சுகாதார பாதுகாப்பு மேற்கொள்வது என விவாதித்தனர் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் தூய்மையான ஆற்றல் பரிமாற்றம், போதை பொருட்களை ஒழிப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுவது மற்றும் மகளிருக்கான பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பது பற்றியும் ஆலோசனை மேற்கொண்டனர் என பிரைஸ் கூறியுள்ளார்.

சந்திப்பின்போது, ரஷியா மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட சர்வதேச பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள், இந்தோ-பசிபிக் பகுதியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் மண்டல விவகாரங்கள் பற்றியும் வெளியுறவு மந்திரிகள் ஜெய்சங்கர் மற்றும் பிளிங்கன் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர் என்று நெட் பிரைஸ் கூறியுள்ளார்.


Next Story