காதலுக்கு எதிர்ப்பு; விஷ ஊசி செலுத்தி மகளை கொல்ல முயன்ற தந்தை - திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்


காதலுக்கு எதிர்ப்பு; விஷ ஊசி செலுத்தி மகளை கொல்ல முயன்ற தந்தை - திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்
x

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு போலி டாக்டர் மூலம் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன் குமார். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் நவீன்குமாருக்கு மகள் உள்ளார்.

இதனிடையே, நவீன் குமாரின் மகள் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு நவீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல முறை எச்சரித்தும் தனது மகள் அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்ததும் தனது காதலை முறித்துக்கொள்ளாததாலும் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில், நவீன் தனது மகள் காலில் அடிபட்டுள்ளதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். வீட்டில் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு மரத்தில் இருந்த குரங்கை பார்த்து பயந்து தனது மகள் மாடியில் இருந்து கிழே விழுந்துவிட்டதாகவும், அதனால் காலில் காயம் ஏற்பட்டதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்கு தனது மகளை நவீன் சிகிச்சைக்காக மாற்றியுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்ப்பெண்ணின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, இளம்ப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்துகள், அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

அப்போது, இளம்ப்பெண்ணுக்கு அதிக அளவில் செலுத்த்பபட்டால் விஷமாக மாறக்கூடிய பொட்டாசியம் குளோரைடு ஊசியை யாரே செலுத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிசிடிவி கேமராக்க்களை ஆய்வு செய்த போலீசார், டாக்டர் உடையில் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் ஒரு நபர் நுழைவதை கண்டுபிடித்தனர். அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போலீசார், மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த நரேஷ் குமார் டாக்டர் உடையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நரேஷ் குமாரை பிடித்து விசாரணை நடத்தில், இளம்பெண்ணுக்கு பொட்டாசியம் குளோரைடு ஊசியை செலுத்தியதை ஒப்புக்கொண்டார். பெண்ணின் தந்தை நவீன் குமார் தனக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து அப்பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லும்படி தன்னிடம் கூறியதாலேயே அவ்வாறு செய்ததாக நரேஷ் ஒப்புக்கொண்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இளம்பெண்ணின் தந்தையான நவீனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மகள் காதலிப்பது தனக்கு பிடிக்கவில்லை எனவும், காதலை கைவிடும்படி பல முறை கூறியும் அவர் கேட்காததால் நரேஷ் குமாருக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து தனது மகளை விஷ ஊசி செலுத்தி கொல்ல திட்டமிட்டதையும் நவீன் ஒப்புக்கொண்டார். இதற்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் தந்தை நவீன் குமார், வார்டு பாய் நரேஷ் குமார், மருத்துவமனை ஊழியாரான பெண் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

விஷ ஊசி செலுத்தப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story