காரில் கடத்திய ரூ.45 லட்சம் கஞ்சா பறிமுதல் போலீசார் அதிரடி


காரில் கடத்திய ரூ.45 லட்சம் கஞ்சா பறிமுதல் போலீசார் அதிரடி
x

கோலார் புறநகரில் காரில் கடத்திய ரூ.45 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பிடித்து பறிமுதல் செய்தனர்.

கோலார் தங்கவயல்:

கஞ்சா கடத்தல்

கோலார் டவுனை அடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சிலர் காரில் கஞ்சா கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு தேவராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், கோலார் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயண்ணரெட்டி மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு அவ்வழியே வரும் வாகனங்களை சோதனை செய்தனர்.

கார் பறிமுதல்

கொண்டராஜனஹள்ளி கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் எழும் வகையில் கார் ஒன்று வந்தது. அதை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போலீசார் காரில் கஞ்சா மறைந்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே கார் மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான 84 கிலோ 710 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவர் கவுஸ் பாஷா என்பவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story