புனே திரைப்பட கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கில் பிணமாக மீட்பு
புனே திரைப்பட கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார்.
புனே,
புனே திரைப்பட கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார்.
தூக்கில் மாணவர்
கோவாவை சேர்ந்தவர் அஸ்வின் அனுராக் சுக்லா(வயது32). இவர் புனேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் டி.வி. கல்லூரியில் ஒளிப்பதிவு இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக அஸ்வின் அனுராக் சுக்லாவின் அறை மூடியே இருந்தது. மாணவர்கள் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.
எனவே இன்று காலை இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் அஸ்வின் அனுராக் சுக்லா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை?
திரைப்பட கல்லூரி மாணவர் மரணம் குறித்து புனே டெக்கான் ஜிம்கானா போலீஸ் சீனியர் இன்ஸ்பெக்டர் முரளிதர் காபே கூறுகையில், " மாணவர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். ஆனால் இதுவரை தற்கொலை கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனவே சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் " என்றார்.
திரைப்பட கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.