பெண்ணிடம் செல்போன் பறித்த திருடனை ஒரு கி.மீ. தூரம் துரத்தி பிடித்த போலீஸ்காரர்- மும்பையில் சினிமா பாணியில் பரபரப்பு
பெண்ணிடம் செல்போன் பறித்த திருடனை போலீஸ்காரர் ஒருவர் சினிமா பாணியில் ஒரு கி.மீ. தூரம் துரத்தி பிடித்தார்.
மும்பை,
பெண்ணிடம் செல்போன் பறித்த திருடனை போலீஸ்காரர் ஒருவர் சினிமா பாணியில் ஒரு கி.மீ. தூரம் துரத்தி பிடித்தார்.
செல்போன் பறிப்பு
மும்பை பாந்திரா போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் விகாஷ் பாபர். இவர் இன்று பாந்திரா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆசாமி, பெண் ஒருவரிடம் செல்போனை பறித்து விட்டு ஓட்டம் பிடித்தார்.
இதை கவனித்த போலீஸ்காரர் விகாஷ் பாபர் சற்றும் தாமதிக்காமல் திருடனை துரத்தினார். அந்த திருடன் தொடர்ந்து ஓடவே போலீஸ்காரரும் விடாமல் துரத்தி சென்றார். சுமார் ஒரு கி.மீ. தூரம் ஓடிச் சென்று திருடனை மடக்கி பிடித்தார்.
சினிமா பாணியில்...
பரபரப்பான வீதியில் சினிமா பாணியில் திருடனை போலீஸ்காரர் விரட்டி சென்ற சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதற்கிடையே பிடிபட்ட திருடன் பெயர் தனிஷ் கான் என்று தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து செல்போனை மீட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
கைதான தனிஷ் கான் போதைக்கு அடிமையானவர் என்றும், அபேஸ் செய்யும் செல்போன்களை விற்று போதைப்பொருள் வாங்கி வந்ததை வழக்கமாக வைத்திருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.