உலகை உலுக்கிய ஹிரோஷிமா சம்பவம்


உலகை உலுக்கிய ஹிரோஷிமா சம்பவம்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:57 AM GMT (Updated: 6 Aug 2019 4:57 AM GMT)

சூரியன் உதயமாகும் நாடு என்றழைக்கப்படும் ஜப்பான் நாட்டில் எல்லா நாளையும் போலத்தான் அன்றைய பொழுதும் விடிந்தது.

ன்று (ஆகஸ்டு 6-ந் தேதி) ஹிரோஷிமா நினைவு தினம்.

சூரியன் உதயமாகும் நாடு என்றழைக்கப்படும் ஜப்பான் நாட்டில் எல்லா நாளையும் போலத்தான் அன்றைய பொழுதும் விடிந்தது. ஆனால் அன்றைய நாள் அவர்களது வரலாற்றில் பெரும் சோகம் நிறைந்த நாளாக அமையும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். இன்றைக்கு 74 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்கா ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசியது. என்ன ஏது என்று புரிவதற்குள், அந்நகரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

சென்ற நூற்றாண்டு பல வகைகளில் சிறப்பு மிக்கது. அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது, மனிதன் புவியீர்ப்பு விசையை கடந்து விண்வெளிக்கு சென்றது, மருத்துவதுறையில் மாபெரும் சாதனைகள் கண்டது, கணினியை கண்டுபிடித்தது என அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரத்தில் மனிதன் மனிதனை கொத்துக்கொத்தாய் கொன்றது. குறிப்பாக, இரண்டு உலக போர்கள் ஏறத்தாழ 12 கோடி மக்களின் உயிர்களை பறித்த கொடூரமும் சென்ற நூற்றாண்டில்தான் அரங்கேறியது.

இரண்டாம் உலக போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ‘அச்சு நாடுகள்’ என்று ஓரணி சேர்ந்து போரினை தொடங்கின. 1939-ம் ஆண்டு ஜெர்மனி போலந்து நாட்டை தாக்கி கைப்பற்றியது. இதனையே இரண்டாம் உலக போரின் தொடக்கம் என்பர். பிரித்தானியா, ருசியா, ஐரோப்பிய நாடுகள் ‘நேச நாடுகள்’ என அணிவகுத்து இத்தாக்குதல்களை எதிர்கொண்டன. ஆனால், அச்சு நாடுகளின் கையோங்கி ஐரோப்பாவில் பல நாடுகளை கைப்பற்றினர். ஜெர்மனி ஐரோப்பிய நாட்டிலும், ஜப்பான் ஆசியாவிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த போரிட்டனர். ஐரோப்பாவில் பிரான்சு உள்பட பெரும்பாலான நாடுகள் ஜெர்மனியிடம் வீழ்ந்தன. முதலில் அமெரிக்கா இவர்களோடு சேராமல் விலகி இருந்தது. ஆனால், ஜப்பான் பசிபிக் பெருங்கடலில் முத்து துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ கப்பல்களை தாக்கி முழுவதுமாக அழித்தபோது, அமெரிக்காவும் உலகப்போரில் இறங்கியது.

தோல்வி முகத்தில் இருந்த நேச நாடுகள் மீண்டும் புத்துயிர் பெற்று வெற்றியை நோக்கி நகர தொடங்கின. 1945-ல் நேச நாடுகள் ஜெர்மனியை கைப்பற்றின. அதன் அதிபர் கொடுங்கோலன் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டவுடன் ஜெர்மனி வீழ்ந்தது. அச்சு நாடுகள் சரணடைந்தன. ஆனால், ஜப்பான் மட்டும் கடைசி வீரன் உள்ளவரை இறுதிவரை போராடி, தாய்நாட்டை காப்பாற்றுவோம் என்று தொடர்ந்து போரில் ஈடுபட்டது. ஜப்பானின் தற்கொலை படையினரின் தாக்குதலால் அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து பெருமளவில் கொல்லப்பட்டனர். இதனை எப்படி சமாளிப்பது, ஜப்பானை எவ்வாறு சரணடைய செய்து போரினை முடிவுக்கு கொண்டுவருவது என்று அமெரிக்கா திணறியது.

இதற்கிடையில் அமெரிக்காவில், சில விஞ்ஞானிகள் அரசின் உத்தரவின்படி ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு மான்ஹாட்டன் திட்டம் என்று பெயரிட்டிருந்தனர். 1945-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நியூ மெக்சிகோ மாநிலத்தில் அமைந்துள்ள பாலை நிலத்தில் உலகின் முதல் அணுகுண்டை அமெரிக்கா வெற்றிகரமாக வெடித்து சோதனை செய்தது. இந்த வெற்றி பெரும் பலத்தையும் நம்பிக்கையும் அளித்தது. ஜப்பானை வீழ்த்த பலவகையில் ஆலோசனைகள் நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரூமன் இறுதியில் அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தார்.

1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி, அமெரிக்காவின் பி59 விமானம் டினியன் விமான தளத்திலிருந்து அதிகாலையில் ‘சிறிய பையன்’ என்று பெயரிடப்பட்ட அணுகுண்டை தாங்கி ஹிரோஷிமா நகரத்தை நோக்கி புறப்பட்டது. சரியாக காலை 8 மணிக்கு உலகின் முதல் அணு குண்டை வீசியது.விமானத்தில் இருந்து வீசப்பட்ட 64 கிலோ எடையுள்ள ‘யுரேனியம் 235’ குண்டு தரையில் விழ 45 வினாடிகள் எடுத்துக்கொண்டது. விழுந்த அடுத்த நொடியே பெரும் நெருப்புக் கோளத்தை சுமார் 5 மைல் சுற்றளவிற்கு உருவாக்கி, ஹிரோஷிமாநகரின் 60 சதவீத பகுதிகள் கண் மூடிதிறப்பதற்குள் தரை மட்டமாயின.80 ஆயிரம் மக்கள் நொடிப்பொழுதில் கொல்லப்பட்டனர். ஒரு சில மாதங்களில் மேலும் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். கதிர்வீச்சின் காரணமாக பல மாதங்கள், தொடர்ந்து மக்கள் மாண்டது பரிதாபம்.

ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும் ஜப்பான் சரண் அடைய மறுத்தது.அணுகுண்டு தாக்குதலும், உயிர் இழப்பும் ஜப்பான் நாட்டு பேரரசர் மிச்சிநோமியா ஹிரோஹிட்டோவின் கல்மனத்தை கரைத்துவிடவில்லை. கடைசி ஜப்பானியன் இருக்கும்வரை நாட்டிற்காக போராடுவான் என்று கூறினார். இதனால், மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டினை ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது வீசியது. 50 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில், ஜப்பான் பணிந்து சரண் அடைந்தது . இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா பெருமழிவு ஏற்படுத்தும் போர் ஆயுதத்தைக் கொண்ட வலிமைமிக்க நாடாக மாறியது.

இதனால் தங்கள் நாட்டினை பாதுகாக்க பிரிட்டிஷ், சோவியத் ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா என பல நாடுகள் அணுஆயுதங்களை உருவாக்கிக் கொண்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட நவீன குண்டுகள் ஒவ்வொன்றும் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட குண்டுகளைவிட 3 ஆயிரம் மடங்கு அதிக சக்தி கொண்டவை. இன்னொரு உலக யுத்தம் ஏற்பட்டால், அதுவே கடைசி யுத்தமாக இருக்கும். காரணம் அதற்கு பிறகு ஒட்டுமொத்த உயிரினமே அழிந்துபோய் விடும். இதை நாடுகள் உணர்ந்து உள்ளன. பொறுப்போடு தான் நடந்துகொள்கின்றன. ஆனால், அச்சமெல்லாம், உலகில் பரவிவரும் பயங்கரவாதிகளிடம் அணுகுண்டு தயாரிக்கும் திறன் சென்றால் என்ன ஆகும் என்பதே. இதனை தவிர்க்க ஒரே வழி, அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்பதுதான். வைப்பார்களா என்பதுதான் நம்மிடையே உள்ள பெரும் கேள்வி.

கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர்.

Next Story