தினம் ஒரு தகவல் : கையகப்படுத்தும் நிலங்கள்


தினம் ஒரு தகவல் : கையகப்படுத்தும் நிலங்கள்
x
தினத்தந்தி 17 Feb 2020 1:44 PM GMT (Updated: 17 Feb 2020 1:44 PM GMT)

வெளிநாடுகளில் இருப்பது போல வானளாவிய கட்டிடங்கள் இங்கேயும் வருமா என்று எண்ணிக்கொண்டிருந்த நிலை நம் நாட்டில் முன்பு இருந்தது. இன்றோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெரு நகரங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் மேலே எழும்பிக் கொண்டிருக்கின்றன.

சிறு நகரங்களிலும்கூட இன்று பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. பல கட்டுமான நிறுவனங்கள் நிலத்தை வாங்கி பிரமாண்டமான கட்டிடங்களை கட்டி விற்கிறார்கள். எனவே நிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

நிலத்தின் மதிப்பு உயர்வதால் விளை நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறிக்கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் தரிசு நிலங்களை வாங்கி, அதை மனை போட்டு விற்றார்கள். ஆனால், இன்றோ விவசாய நிலங்கள்கூட அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக ஆகிவருகின்றன.

இந்த பணிகள் எல்லாம் ரியல் எஸ்டேட் வணிகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை தனியார் செய்துவந்ததை இனி அரசும் செய்யப் போகிறது என்கிறார்கள், புதிதாக வந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள்.

அதாவது, தேச பாதுகாப்பு, ராணுவம் தொடர்பானவை, மின்சாரத் திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள், தொழில் பூங்காக்கள், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் ஆகிய பிரிவுகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது, அதன் உரிமையாளரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்கிறது, இந்த சட்டம்.

எனவே தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த இப்போது கொண்டு வந்துள்ள சட்டம் அரசுக்கு உதவிகரமாக இருக்கலாம். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவும் இருக்கலாம்.

ஆனால், ஒரு வி‌‌ஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். மேற்சொன்ன திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்யப்படும் நிலமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று முன்பு இருந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் திருத்தம் கொண்டுவந்துள்ள அவசர சட்டத்தில், மேற்படி நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதைப் பார்க்கத் தேவை இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே விளை நிலங்களில்கூட இனிக் கட்டுமானங்கள் பெருகும் நிலை ஏற்படலாம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே நிலம் கையகப்படுத்தும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அப்போதே நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அரசுக்கு பொறுப்பு கூடியது.

அதனால் பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியிருந்தது. அப்போது நிலம் கையகப்படுத்துவது மேலும் அதிகரித்தது. நிலம் கையகப்படுத்தும்போது பலரும் நீதிமன்றத்தை நாடும் நிலையும் அதிகரித்தது. நீதிமன்றத்தில் போடப்படும் தடைகளால் பல கட்டுமானத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன, அல்லது தாமதமாயின. எனவே இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்கத்தான் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Next Story