கொரோனா வைரசுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை


கொரோனா வைரசுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
x
தினத்தந்தி 6 July 2021 2:41 AM GMT (Updated: 6 July 2021 2:41 AM GMT)

கொரோனா வைரசுக்கு சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது எலிகளிடம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரசுக்கு சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது எலிகளிடம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டு உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் தேசிய அறிவியல் அகாடமி நடவடிக்கைகள் மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.

அந்தவகையில் கொரோனா பாதித்த எலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு மேற்படி புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் கொண்டு சிகிச்சை அளித்தபோது அதன் இறப்புகள் குறைவதுடன், நுரையீரல் தொற்று குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது. வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஒரு வகையான இந்த புரோட்டீஸ் தடுப்பான்களால், வைரஸ்களின் இனப்பெருக்கம் தடுப்பதுடன், வைரஸ் உற்பத்திக்கு தேவையான புரதங்களை செயல்படுத்துவதையும தடுக்கப்படுகிறது.

இது குறித்து கன்சாஸ் பல்கலைக்கழக இணை பேராசிரியரான யுன்ஜியோங் கிம் கூறுகையில், ‘பூனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்காக நாங்கள் இந்த புரோட்டீஸ் தடுப்பான்களை ஜிசி376 நாங்கள் உருவாக்கினோம். தற்போது அது விலங்குகளுக்கான மருந்தாக வர்த்தக ரீதியான தயாரிப்பில் உள்ளது’ என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவ தொடங்கிய பிறகு, இந்த வைரசுக்கு எதிராக இந்த தடுப்பானும் பயனுள்ளதாக இருப்பதாக பல ஆராய்ச்சி குழுக்கள் தெரிவித்ததாக கூறிய கிம், தற்போது பலரும் இதை ஒரு சிகிச்சையாக தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இந்த புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் ஜிசி376-ஐ டியூட்டிரேசன் மூலம் மாற்றியமைக்கும்போது, அது கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
தொற்று பாதித்த எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, சிகிச்சை பெறாத எலிகளை விட சிகிச்சை பெற்ற எலிகளிடம் இறப்பு விகிதம் மிகவும் குறைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மேம்பட்ட தடுப்பான்களை வைரஸ் சிகிச்சை நிபுணர்கள் உருவாக்கி வருகின்றனர். இதில் மேற்படி சிகிச்சை முறை மேலும் சாத்தியமான மேம்பாட்டுக்காக மதிப்பீடு செய்யப்படுகிறது. எலிகளிடம் இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இது கொரோனா சிகிச்சை முறையில் முக்கிய திருப்பு முனையாக கருதப்படுகிறது.


Next Story