பூமியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 சென்டிமீட்டர் விலகிச் செல்லும் நிலவு....! பூமிக்கு பாதிப்பா..?


பூமியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 சென்டிமீட்டர் விலகிச் செல்லும் நிலவு....! பூமிக்கு பாதிப்பா..?
x
தினத்தந்தி 21 Oct 2022 8:28 AM GMT (Updated: 21 Oct 2022 8:45 AM GMT)

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் பருவநிலை மாற்றத்திலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்,

பூமியிலிருந்து நிலவு மெதுவாக நகர்ந்து செல்கிறது என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நிலவு மெதுவாக பூமியை விட்டு நகர்கிறது. இது சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

21 ஜூலை 1969 அன்று, அப்பல்லோ 11 விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்றடைந்தனர்.1969ஆம் ஆண்டில், நாசாவின் அப்பல்லோ பயணத்தின் போது நிலவில் பிரதிபலிப்பு பேனல்கள் நிறுவப்பட்டன.

அப்பல்லோ பயணத்தின் போது நிறுவப்பட்ட ஒரு சிறிய சாதனம், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள துல்லியமான தூரத்தை கணக்கிட உதவுகிறது.இவற்றில் ஐந்து சாதனங்கள் அப்பல்லோ 11, 14 மற்றும் 15 பயணங்களின் போது நிறுவப்பட்டுள்ளன.

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை, பூமியில் இருந்து அனுப்பப்படும் லேசர் மூலம் துல்லியமாக கணக்கிட முடியும். அதன்படி, நிலவு ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் (இன்னும் துல்லியமாக 3.78 சென்டிமீட்டர்) நம்மை விட்டு நகர்கிறது என்பதை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடக்கிறது.

நிலவு அதன் ஈர்ப்பு விசையின் காரணமாக, பூமியில் உள்ள கடல்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. இதனால் அலைகள் ஏற்படுகின்றன. இதில் சூரியனும் பங்கு வகிக்கிறது.

இந்த நிகழ்வு காரணமாக பூமி- நிலவு அச்சில், உராய்வு ஏற்படுகிறது. எனவே வெப்ப வடிவில் ஆற்றல் சிதறல் ஏற்படுகிறது. இதனால் பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதை சமநிலையில், விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மேலும், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது. அத்துடன் பருவநிலை மாற்றத்திலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story