திருச்செந்தூரில் 100 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியது


திருச்செந்தூரில் 100 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியது
x

திருச்செந்தூரில் 100 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியது. எனினும் பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடினார்கள்.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவில் அருகேயே கடலும் உள்ளது. கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டும் அல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

திருச்செந்தூர் கோவில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி காலங்களில் கடல்நீர் உள்வாங்கும். இந்த திதி நாட்களுக்கு முந்தைய சில நாட்கள், பிந்தைய சில நாட்களில் காலை கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

கடல்நீர் உள்வாங்கியது

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பவுர்ணமி ஆகும். இதையொட்டி நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடையே சுமார் 100 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதை ஏராளமானவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கடல்நீர் உள்வாங்கினாலும் காலை முதல் பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் மாலையில் கடல்நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது.


Next Story