மின்கசிவு காரணமாக 11 கூரை வீடுகள் சாம்பல்


மின்கசிவு காரணமாக 11 கூரை வீடுகள் சாம்பல்
x

மின்கசிவு காரணமாக 11 கூரை வீடுகள் சாம்பல்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி அருகே மின்கசிவு காரணமாக 11 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாகின. இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

தீவிபத்து

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது. அப்போது காற்று அதிகமாக வீசியது.

இந்த தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி (50), வெங்கடேசன்(25), பாப்பையன்(65), ராஜேந்திரன் (65), ராஜேஷ் கண்ணா(22), மதீஷ் ராஜ்(23), சுப்பிரமணியன்(50), அரவிந்த் (28), பெரியசாமி, ராகுல்(21) ஆகியோரின் கூரைவீடுகளுக்கும் பரவியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

இதுகுறித்து உடனடியாக நாகை, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை பல மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது. இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்தை நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று பார்வையிட்டார்.

நிவாரண உதவி

தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கசிவு காரணமாக 11 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது அந்தபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story