பிளஸ்-2 ஆங்கில தேர்வினை 16,352 பேர் எழுதினர்


பிளஸ்-2 ஆங்கில தேர்வினை 16,352 பேர் எழுதினர்
x

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு பொதுத்தேர்வில் பிளஸ்-2 ஆங்கில தேர்வினை 16,352 பேர் எழுதினர். 737 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பெரம்பலூர்

பிளஸ்-2 ஆங்கில தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 33 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 44 தேர்வு மையங்களிலும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 80 பள்ளிகளை சேர்ந்த 3,903 மாணவர்களும், 3,752 மாணவிகளும் என மொத்தம் 7,655 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் ஆங்கில தேர்வினை 7,355 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 158 மாணவர்களும், 103 மாணவிகளும் என மொத்தம் 261 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு விதி விலக்கு

39 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில தேர்வு எழுதுவதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தனித்தேர்வர்களாக ஆங்கில தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 23 ஆண்களும், 37 பெண்களும் என மொத்தம் 60 பேரில், 58 பேர் தோ்வு எழுதினர். 2 பெண்கள் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளை சேர்ந்த 4,464 மாணவர்களும், 4,724 மாணவிகளும் என மொத்தம் 9,188 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் ஆங்கில தேர்வில் 8,717 பேர் கலந்து கொண்டு எழுதினர். ஆனால் 274 மாணவர்களும், 185 மாணவிகளும் என மொத்தம் 459 பேர் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 99 ஆண்களும், 140 பெண்களும் என மொத்தம் 239 பேரில், 222 பேர் தோ்வு எழுதினர். 8 ஆண்களும், 7 பெண்களும் என மொத்தம் 15 பேர் தேர்வு எழுத வரவில்லை. 12 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கும், தனித்தேர்வர்களில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆங்கில தேர்வு எழுதுவதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இன்று பிளஸ்-1 ஆங்கில தேர்வு

காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது. தேர்வினை அறை கண்காணிப்பாளரும், பறக்கும் படையினரும் கண்காணித்தனர். மாவட்டங்களில் ஆங்கில தேர்வில் மாணவ-மாணவிகள் யாரும் காப்பி அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2 ஆங்கில தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள் பதிலளிக்க கஷ்டமாக இருந்ததாக ஒரு சில மாணவ-மாணவிகள் கூறினர்.

பிளஸ்-1 ஆங்கில தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.


Next Story