வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர்

பள்ளத்தில் கவிழ்ந்தது

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளம்பூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 29). இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான மோகனுடன் (37) ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூருக்கு வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபாகரன் ஓட்டினார்.

பாடாலூர் டாஸ்மாக் கடையை தாண்டி தெரணி சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்

இதேபோல் பாடாலூர் அருகே உள்ள ஸ்ரீதேவிமங்கலத்தில் இருந்து சென்னைக்கு சின்ன வெங்காயம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலையில் சென்றபோது, சிறுவாச்சூரில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும், டிராக்டரும் மோதிக்கொண்டன.

இதில், மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரன் (45), அதே கிராமத்தை சேர்ந்த படையப்பா (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்குசென்று 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து, டிராக்டர் டிரைவர் செட்டிகுளத்தைச் சேர்ந்த சரத்குமாரை (22) கைது செய்தனர்.


Next Story