3 பேருக்கு 20 ஆண்டு சிறை


5 வயது சிறுமியை மொட்டை மாடிக்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிவகங்கை

5 வயது சிறுமியை மொட்டை மாடிக்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர்கள் ராஜா (23), மதிமாறன் (21), அய்யங்காளை (24). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். கூலி வேலை செய்து வந்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி இவர்கள் 3 பேரும் சேர்ந்து, விடுமுறைக்கு வந்திருந்த 5 வயது சிறுமியை ஒரு சமுதாயக்கூடத்தின் மொட்டை மாடிக்கு தூக்கிச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து அந்த சிறுமியின் பாட்டி, மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா விசாரணை நடத்தி, 3 பேரையும் கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

3 பேருக்கு சிறை

இந்த வழக்கின் விசாரணை, சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனலட்சுமி ஆஜராகி வாதிட்டார்.

விசாரணை முடிவில் நீதிபதி சரத்ராஜ், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் குற்றச்சாட்டப்பட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளனர். அவர்கள் 3 பேரும் சிறையில் இருந்த காலத்தை, தண்டனை காலத்தில் கழித்துக் கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story