காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்


காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
x

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் ‘ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள். வசதிபடைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள். வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்ல முடிவது இல்லை.

பெரம்பலூர்

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது. ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள்.

அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்து செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தை சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வரவேற்கத்தக்கது

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த விஜயா:- கிறிஸ்தவர்கள் புனித பயணமாக ஜெருசலேத்திற்கும், இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணமாக செல்கின்றனர். இதேபோல் காசி யாத்திரை என்பது வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் புனித யாத்திரையாக இந்து மக்கள் கருதுகின்றனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி அளிப்பது போல், தற்போது தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு முதற்கட்டமாக 200 பக்தர்களை ஆன்மிக பயணமாக அரசு சார்பில் நிதி உதவி அளித்து அழைத்து செல்லப்படுவார்கள் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு ஏழை, எளிய வயதான ஆன்மிகவாதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆன்மிக பயணம் செல்லும் வாய்ப்பு

பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த நடராஜன்:- இந்துக்களாக பிறந்த எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல விரும்புவார்கள். ஆனால் வசதி படைத்த ஆன்மிகவாதிகள் தான் காசிக்கு சென்று வர முடிந்தது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பால் இனிவரும் காலங்களில் ஏழை, எளிய, வயதான ஆன்மிகவாதிகளும் காசிக்கு ஆன்மிக பயணமாக செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மொத்தத்தில் இந்த திட்டம் இந்து சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story