நெல்லையில் விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது


நெல்லையில் விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது
x
தினத்தந்தி 23 March 2018 1:39 AM GMT (Updated: 23 March 2018 1:39 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி முதல் அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டது.

நெல்லை,


விசுவ இந்து பரி‌ஷத் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்பட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து கடந்த மாதம் (பிப்ரவரி) 13–ந் தேதி ராமராஜ்ய ரதம் புறப்பட்டது.

இந்த ரதம் கடந்த 20–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கேரள மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகம் வந்தது. தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மதுரை, தூத்துக்குடி வழியாக மீண்டும் நேற்று பாளையங்கோட்டைக்கு வந்தது.

பகல் 3 மணி அளவில் பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா கல்லூரிக்கு வந்தது. பக்தானந்தசுவாமி தலைமையில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரதத்தில் உள்ள ராமர், சீதை சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கல்லுரி மாணவிகள் வரிசையில் நின்று ரதத்தை பார்வையிட்டனர். 3.50 மணி அளவில் ரதம் புறப்பட்டது. ராமராஜ்ய ரதம் நெல்லை மாநகர பகுதிக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ரதம் புறவழிச்சாலை வழியாக கன்னியாகுமரிக்கு சென்றது. செல்லும் வழியில் வள்ளியூர் மற்றும் அந்த பகுதியில் உள்ள ஊர்களில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க  நெல்லையில் 19 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் 144  தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

Next Story