இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக அறிவிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்


இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக அறிவிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:40 PM GMT (Updated: 13 Jun 2018 11:40 PM GMT)

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

நாடு முழுவதும் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அடிப்படை இந்தி அறிவை பெற்றிருக்கவேண்டும்; இந்தி தெரியாதவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற மொழிகளை அழித்து விட்டு, இந்தியை ஊக்குவிப்பதற்கான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக மத்திய அரசு அறிவிப்பது எந்த வகையில் நியாயம்?

2014-ம் ஆண்டு பதவியேற்ற நாளில் இருந்து இந்தியை திணிப்பதற்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட நரேந்திர மோடி அரசு, அவை அனைத்தும் தோல்வியடைந்து விட்ட நிலையில் இந்த புதிய திட்டத்தை திணிக்க முயல்கிறது. 55 ஆண்டுகளுக்கு முன் ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிப்பது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும். எனவே, இந்தி அறிவு தேவைப்படாத எந்த பணிக்கும் அதை கட்டாயம் என்று அறிவிக்கக்கூடாது. கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான ஆள்தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற்று புதிய அறிவிக்கை வெளியிடப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story