வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பதற்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசன பகுதியில் ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
நாளை முதல் தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, மதுரை மாவட்டம், பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசன பரப்பான 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பரப்பான 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் மொத்தம் 8 ஆயிரத்து 461 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் இருப்பை பொருத்து 20.8.2018 (நாளை) முதல் வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story