ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்கம்


ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 18 Aug 2018 11:15 PM GMT (Updated: 18 Aug 2018 11:15 PM GMT)

ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடத்தில் உள்ள பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன? என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழக நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சென்னை- திருச்சி - திண்டுக்கல் சாலையில் ஒரு இரும்புப் பாலம் 1928-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்பாலமானது நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை நிறைவு செய்துள்ளது.

புதிய பாலம் திறப்பு

இந்த பழமையான பாலத்தின் வயதைக் கருத்தில் கொண்டு 2012-ம் ஆண்டிலேயே புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பழுதடைந்த கொள்ளிடம் ஆற்று இரும்புப் பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் கட்டப்படுமென்று 2012-ம் ஆண்டு முதல்-அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, புதிய பாலம் கட்ட ரூ.77.72 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பழைய பாலத்திலிருந்து 10 மீட்டர் தூரம் தள்ளி மேற்குப் பக்கத்தில் புதிய பாலம் கட்டப்பட்டு 14.2.2016 அன்று போக்குவரத்து பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

சிறிய விரிசல்

புதிய பாலம் கட்டப்பட்ட பின்பு பழைய இரும்பு பாலம் கைவிடப்பட்டு அனைத்துவித போக்குவரத்தும் 2016-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. பழைய இரும்பு பாலம் 33 மீட்டர் நீளமுடைய 24 கண்களை கொண்டுள்ளது.

15.8.2018 அன்று மாலை 4.30 மணியளவில் கொள்ளிடம் ஆற்றில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அன்று மாலை 6.30 மணியளவில் பழைய பாலத்தின் 18-வது தூணின் கிழக்கு பக்கத்தில் ஒரு சிறிய விரிசல் ஏற்பட்டிருப்பதை நெடுஞ்சாலைத்துறையின் ரோந்துக்குழு கண்டறிந்தது.

தூண் இறங்கியது

16.8.2018 அன்று காலை 8 மணியளவில் இந்த விரிசல் 10 செ.மீ. அகலத்திற்கு இருந்தது. அதே நாள் காலை 11 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சர், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் இப்பாலத்தை பார்வையிட்டார்கள்.

அப்போது கொள்ளிடம் ஆற்றில் 76 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. பாலம் 60 செ.மீ. அளவுக்கு விரிசலடைந்திருந்தது. பாலத்தின் 18-வது தூண் 1 மீட்டர் அளவிற்கு கீழே இறங்கி விட்டது. 18-வது தூணில் உள்ள இரண்டு கான்கிரீட் ஸ்லாப்களும் தூணோடு சேர்ந்து கீழே இறங்கியுள்ளது.

பாதிப்பில்லை

பழைய பாலத்தின் அஸ்திவாரமானது, ‘வெல் பவுன்டேஷன்’ என்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணுக்கும் மூன்று “வெல்” உள்ளன. தூண்கள், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுள்ளன.

2012-ம் ஆண்டிலிருந்து அரசால் சொல்லப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் துரித நடவடிக்கையால் பழைய வலுவிழந்த பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்காமல் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story