“ரெட் அலர்ட்... என்றால் என்ன ? மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்


“ரெட் அலர்ட்... என்றால் என்ன ?   மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்
x
தினத்தந்தி 4 Oct 2018 9:13 AM GMT (Updated: 4 Oct 2018 9:13 AM GMT)

“ரெட் அலர்ட்...” மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே இது போன்ற எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது என வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்து உள்ளார். #RedAlert

சென்னை

கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், மஞ்சள் அலர்ட், பச்சை அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது.

 இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.

அடுத்ததாக ஆம்பர் என்ற அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பவையாகும்.

இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இந்த அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதை என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விளக்குகிறது.

அடுத்ததாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு பச்சை அலர்ட் ஆகும்.

இது குறித்து வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் கூறியதாவது:-

“ரெட் அலர்ட்...” மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே இது போன்ற  எச்சரிக்கை கொடுக்கபடுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் 7 தேதியே முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியபட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க குழுக்கள் அமைக்கபட்டு உள்ளன.  பருவமழையை எதிர்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புயலால் எந்த பாதிப்பும் இல்லை என  கூறி உள்ளார்.

கட்டுப்பாட்டு அறை விவரங்கள் வருமாறு:-

காஞ்சிபுரம்- 1077, 044 27237107, 27237207,
தாம்பரம்- 044 22410050
வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்க 
காஞ்சிபுரம்-9445051077
தாம்பரம்- 9445071077

Next Story