கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றாரா?


கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றாரா?
x
தினத்தந்தி 8 Oct 2018 10:15 PM GMT (Updated: 8 Oct 2018 8:44 PM GMT)

கள்ளக்காதலுக்காக தனது 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைதான அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது.

செங்குன்றம், 

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது30). அவரது மனைவி அபிராமி(29). இந்த தம்பதிகளுக்கு அஜய்(7), கார்னிகா(3) என்ற குழந்தைகள் இருந்தனர்.

அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம்(28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி பெற்ற குழந்தைகள் என்று கூட பாராமல் தனது 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் அபிராமி அவரது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயிலில் தற்கொலை முயற்சியா?

இரட்டை கொலை வழக்கில் கைதான அபிராமி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் உள்ள அவரைப்பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் ஜெயிலில் உள்ள அபிராமி நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது.

இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ஜெயிலில் அபிராமி தற்கொலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. இது வதந்தி தான் என்பது தெரியவந்தது.

சகஜமாக இருக்கும் அபிராமி

இதுபற்றி அதிகாரி மேலும் கூறுகையில் ‘புழல் ஜெயில் குறித்து அடிக்கடி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று தான் தற்போது அபிராமி ஜெயிலில் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் அப்படி ஒரு சம்பவமும் ஜெயிலில் நடக்கவில்லை. ஜெயிலில் இருக்கும் அபிராமி தற்போது சக பெண் கைதிகளுடன் சகஜமாக பேசி இயல்பாக இருந்து வருகிறார். அவருக்கு ஜெயிலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் சாதாரணமாகவே இருந்து வருகிறார்’ என்றார்.

Next Story