சட்டசபை தொகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. அறிவிப்பு


சட்டசபை தொகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 8:41 PM GMT)

சட்டசபை தொகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வரும் 18-ந்தேதி முதல் 3 நாட்கள் நடைபெற இருப்பதாக, அ.தி.மு.க. அறிவித்து உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு 18-1-2019 வெள்ளிக்கிழமை முதல் 20-1-2019 ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள், ‘எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தலைமைக் கழகத்தால் அறிவிக் கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17-1-2019 அன்று ஆங்காங்கே எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு அல்லது படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்

வரும் 19-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் தொகுதியிலும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூந்தமல்லி தொகுதியிலும் பேசுகிறார்கள்.

20-ந்தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி தொகுதியில் பேசுகிறார்.

Next Story