மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்? கவிஞர் வைரமுத்து கேள்வி


மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்? கவிஞர் வைரமுத்து கேள்வி
x
தினத்தந்தி 16 Jan 2019 11:42 PM GMT (Updated: 16 Jan 2019 11:42 PM GMT)

மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, 

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட்நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவி திருவள்ளுவர் திருநாளை கவிஞர் வைரமுத்து கொண்டாடினார். சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ‘அமெட்’ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம், சுவிட்சர்லாந்து சுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணாமூர்த்தி, வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகர செயலாளர் வி.பி.குமார் உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கர்நாடக இசைப் பாடகி கடலூர் ஜனனி திருக்குறளை இசை பாடல்களாக பாடினார். பிறகு கவிஞர் வைரமுத்து உரத்த குரலில் திருக்குறள்களை சொல்ல சொல்ல, கூடியிருந்த குழந்தைகள் திருப்பி கூறினர்.

இதையடுத்து கவிஞர் வைரமுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள். திருக்குறள் படைத்த புலவர் என்று மட்டும் திருவள்ளுவரை கருதிவிடமுடியாது. அவர் ஒரு புரட்சியாளர். மதுப்பழக்கம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதை யாரும் ஒரு பாவமாக கருதாத காலம் அது.

ஆனால் “கள்ளுண்ணாமை” என்ற அதிகாரம் எழுதி மதுவுக்கு எதிராக முதல் கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர். “புலால் உண்ணாமை” என்ற அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக இறைச்சிக்கடைகளை ஒருநாள் மூடுகிற முடிவெடுக்கிற நாம், கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்?

நான் கிராமத்தான். இன்னும் கிராமத்தில் வாழுகிறவன். இன்றைய கிராமத்தில் சென்று பார்த்தால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிப்போனார்கள். நரைத்த தலைகளை பார்க்க முடியவில்லை. ஊருக்கு வழி காட்டும் கிழவர்கள் அதிகம் இல்லை. 15 வயதில் குடிக்க தொடங்கியவர்கள் 50 வயதுக்குள் அடியாகிப்போகிறார்கள்.

தமிழர்களை கொன்றுவிட்டு எப்படி தமிழ்நாட்டை வாழவைக்கப் போகிறோம்? தமிழகத்தை கொஞ்சம், கொஞ்சமாக கொல்லுகிற இந்த மதுவை ஒரே நாளில் ஒழிக்கமுடியாவிட்டாலும், படிப்படியாக ஒழிப்பதற்கு அடிப்படைத் திட்டங்களை உருவாக்கவேண்டும். மதுவை எந்த ஆட்சி ஒழிக்கிறது என்பது முக்கியமல்ல; எந்த ஆட்சி ஒழித்தாலும் அதுதான் மக்களாட்சி என்று கொண்டாடப்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story