சென்னையில் 10-ந்தேதி நடக்கிறது ரஜினி மகள் சவுந்தர்யா 2-வது திருமணம் தொழில் அதிபர் மகனை மணக்கிறார்


சென்னையில் 10-ந்தேதி நடக்கிறது ரஜினி மகள் சவுந்தர்யா 2-வது திருமணம் தொழில் அதிபர் மகனை மணக்கிறார்
x
தினத்தந்தி 22 Jan 2019 9:30 PM GMT (Updated: 22 Jan 2019 8:23 PM GMT)

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனை 2-வது திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சவுந்தர்யா அன்பே ஆருயிரே, மஜா, சண்டக்கோழி, சிவகாசி, சென்னை-28 உள்பட பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வந்தார்.

வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தை தயாரித்தார். ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தையும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் டைரக்டு செய்துள்ளார். இவருக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சவுந்தர்யா-அஸ்வின் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு தற்போது விசாகன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.

சவுந்தர்யா-விசாகன் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் எளிமையாக நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர். திருமணத்துக்காக வீட்டை அலங்கரிக்கும் பணிகள் நடக்கின்றன.

Next Story