விஷம் குடிப்பதை முகநூலில் வெளியிட்டு சென்னை வாலிபர் உருக்கம் காதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் விரக்தி


விஷம் குடிப்பதை முகநூலில் வெளியிட்டு சென்னை வாலிபர் உருக்கம் காதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் விரக்தி
x
தினத்தந்தி 17 Feb 2019 10:00 PM GMT (Updated: 17 Feb 2019 9:19 PM GMT)

‘அலைபாயுதே’ சினிமா பாணியில் நடந்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், விஷம் குடிப்பதை முகநூலில் வீடியோ வெளியிட்டு உருக்கமாக பேசிய சென்னை வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 25). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நாகர்கோவிலில் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதற்கிடையே சஜினும், அந்த மாணவியும் யாருக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் செய்த பிறகு இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். அவ்வப்போது சஜினை சந்தித்து அந்த மாணவி பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் சஜின், அந்த மாணவியின் செல்போனுக்கு அனுப்பிய குறுந்தகவலில், அன்பு மனைவிக்கு திருமண வாழ்த்துகள் என குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மாணவியை, அவருடைய பெற்றோர் வெளியே அனுப்பவில்லை. இதனால் சஜின் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “என் மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டில் சிறை வைத்துள்ளனர். அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது கோர்ட்டில் ஆஜரான மாணவி, சஜின் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனால் மாணவியை அவருடைய பெற்றோருடன் செல்ல கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து சஜினும், அவருடைய பெற்றோரும் சென்று அந்த மாணவியுடன் பேசியுள்ளனர். ஆனாலும் சஜினுடன் செல்ல மாணவி மறுத்துவிட்டார். இதனால் அந்த மாணவிக்கு சஜின் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் சஜின், அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் வேதனை அடைந்த சஜின் திடீரென விஷம் குடித்தார். இதை கண்ட சஜினின் நண்பர்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சஜின் விஷம் குடிப்பதை முகநூலில் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், “நான் அந்த மாணவியை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்தேன். அவரது பெற்றோரின் தூண்டுதலின் பேரில் என் மீது மாணவி புகார் அளித்துள்ளார். இதனால் என் தாயை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். என் தாயா? அல்லது என் காதலா? என்று பார்த்தால் என் தாய் தான் எனக்கு முக்கியம். நான் இறந்து விட்டால் என் முகத்தை மாணவி பார்க்க வேண்டும்” என்று உருக்கமாக சஜின் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Next Story