விரக்தியின் உச்சகட்டத்தில் புலம்புகிறார்: தி.மு.க.வை தாக்கி பேசிய கமல்ஹாசனுக்கு முரசொலியில் பதிலடி


விரக்தியின் உச்சகட்டத்தில் புலம்புகிறார்: தி.மு.க.வை தாக்கி பேசிய கமல்ஹாசனுக்கு முரசொலியில் பதிலடி
x
தினத்தந்தி 18 Feb 2019 6:33 AM GMT (Updated: 18 Feb 2019 2:17 PM GMT)

முதலமைச்சர் கனவில் கட்சி தொடங்கி, அதை கொள்வாரில்லை என்ற விரக்தியில் தலைமுடியையும், சட்டையையும் கிழித்துக் கொண்டு அலையும் நிலைக்கு கமல்ஹாசன் செல்லப் போகிறாரோ என அஞ்ச வேண்டியிருப்பதாக, முரசொலி கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னை எம்ஆர்சி நகரில் பள்ளி மாணவர்கள் மத்தியில்  கலந்துரையாடினார். அப்போது, 

சட்டையை கிழித்துக்கொண்டு தெருவில் நிற்க முடியாது. சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்துக்கொண்டு நிற்க மாட்டேன். அப்படி கிழிந்தாலும் வேறு நல்ல சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியில் வருவேன். என்னுடைய எண்ணம் எதுவோ அதுக்கு தான் நான் கிரீடம் வைப்பேன்.

கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் எதை, எதை செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொண்டேன். பொது அறிவு கூட இல்லாதவர்கள் சிலர் தலைவர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு பொது அறிவு இருக்கிறது. இதனால் எனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்ற தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. கிராம சபை கூட்டம் ஒன்று இருப்பது யாருக்கும் தெரியாதா? நேற்று வந்த பையனை பார்த்து காப்பி அடிப்பதற்கு வெட்கமாக இல்லையா?. என தி.மு.க.வை மறைமுகமாக குற்றஞ்சாட்டி பேசினார்.

இந்நிலையில், முரசொலியில், கமலின் அரசியல் அரைவேக்காட்டுத் தனம் என்ற பெயரில் கட்டுரை வெளியாகியுள்ளது. புரியாமல் பேசி, தனது பேச்சைக் கேட்போரையெல்லாம் கமல்ஹாசன் சட்டையைக் கிழித்துக் கொள்ள வைப்பாரே தவிர, அவர் ஒரு நாளும் சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



கிராம சபை என்பதை, தான்தான் முதன்முதலாக நடத்தியதாகவும், அதனை ஸ்டாலின் காப்பியடித்தார் என்று கூறி தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை கமல் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாகவும் முரசொலி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கனவில் கட்சி தொடங்கி, அதனை கொள்வாரில்லை என்பது தெரிந்துவிட்ட நிலையில், விரக்தியின் உச்சகட்டத்தில் நின்று கமல் புலம்பத் தொடங்கியுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

வெட்கம் என்பதன் பொருள் அறியாது, பல வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையாகச் செய்து கொண்டிருக்கும் கமல், தங்களைப் பார்த்து வெட்கமில்லையா என கேட்பதாகவும் முரசொலி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது உச்சகட்ட காட்சியாக, மூன்றாம் பிறை திரைப்படத்தில் ரெயில் நிலையத்தில் தலைமுடியையும் சட்டையையும் பிய்த்துக் கொண்டு பிளாட்பாரத்தில் அங்கும் இங்கும் ஓடுவாரே, அந்த காட்சி உண்மையில் நடந்துவிடுமோ என அஞ்சுவதாகவும் முரசொலி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கி, எதனை நோக்கி செல்கிறோம் என்று தெரியாமல் தெளிவற்றுத் திரியும் கமல் மற்றவர்களை பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக்கூத்து என்றும் அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

கமல் உங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே எனக் கேட்டபோது, தான் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் பதிலளித்தது கமல்ஹாசனுக்கு வைத்த சூடு என்றும், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் என்றும் முரசொலி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story