கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; நிர்மலா தேவி ஜாமீனில் நாளை வெளிவருகிறார்


கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; நிர்மலா தேவி ஜாமீனில் நாளை வெளிவருகிறார்
x
தினத்தந்தி 19 March 2019 12:26 PM GMT (Updated: 19 March 2019 12:26 PM GMT)

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீனில் நாளை வெளிவருகிறார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.  அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை மேற்கொண்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 12ந்தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சாட்சியங்களை அழிக்க முயற்சிக்க கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், நிர்மலா தேவிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  வழக்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நிர்மலாதேவியின் சகோதரர் ரவி, குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில், ஜாமீனில் வெளியே வருவதற்கான உத்தரவாத கடிதங்களை வழங்கினர்.  இதனை ஏற்ற நீதிமன்றம் ஜாமீனில் செல்ல நிர்மலா தேவிக்கு அனுமதி வழங்கியது.  இந்த கடிதம் மதுரை சிறைக்கு அனுப்பி வைக்கப்படும்.  இதனை தொடர்ந்து அவர், மதுரை சிறையில் இருந்து நாளை மாலை ஜாமீனில் வெளியே வருவார்.

Next Story